தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
தமிழ் மக்களின் பரிதாபகரமான நிலையை உணராமல் கூட்டமைப்பு உறுப்பினர் காலம் கடத்தி வருவதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என தம்மைப் பறைசாற்றி, விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டு விட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணி சில நோக்கங்களை அடைவதற்கு எத்தகைய கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற தலைப்பில் ஆறு விடயங்களை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதில் முதலாவதாக, இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாதவாறு தடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், அவ்வாறான நிலைமைகளைத் தடுப்பதற்கு தமிழர் விடுதலை கூட்டணி செயற்படுவதாகவும் இராணுவத்தினருக்கு பதிலாக பொலிஸாரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிகை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் எதுவித விசாரணைகளுமின்றி பொதுமன்னிப்பு பெற்றுக்கொடுக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துததல் உள்ளிட்ட ஆறு விடயங்கள் குறித்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.